கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது கட்சியின் தலைவரான விஜய் சிபிஐ-யின் நேரடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வரும் ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விஜய் நேரில் ஆஜராகப் பணித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
