பெங்களூருவில் காதலனை வசியம் செய்து தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரிடம் ரூ.2.05 லட்சம் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைச் சரிசெய்ய வழிதேடியபோது, இணையதளத்தில் ‘காதல் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப்படும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த நபரைத் தொடர்பு கொண்டுள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் போலி சாமியார், பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பலமுறை பணத்தைப் பறித்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண்ணிடம், “உன் காதலனை வசியம் செய்ய சிறப்பு பூஜை நடத்த வேண்டும், அதற்கு 4 லட்சம் ரூபாய் செலவாகும்” என்று அந்தப் போலி சாமியார் நேற்று முன் தினம் கூறியுள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லாததால் சந்தேகமடைந்த அந்தப் பெண், சாமியார் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் போலி சாமியார், பணத்தைத் தர மறுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணைத் திட்டியுள்ளார். இது குறித்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், பெங்களூரு அடுகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்தப் போலி சாமியாரை வலைவீசித் தேடி வருகின்றனர்
