தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து ஜே சி டி பிரபாகரன் அக்கட்சியில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே சி டி பிரபாகரன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். புகழேந்தி மற்றும் கே சி பழனிசாமி ஆகியோருடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிலும் அவர் செயல்பட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வில்லிவாக்கம் பகுதியில் போட்டியிட்டு 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அவர் விஜய் கட்சியில் இணைந்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவையாக உள்ளது, அதற்காகவே நான் விஜய்யுடன் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
