கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள தெரு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று சிறுவர்கள் மிக அதிவேகமாக வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக, சாலையில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது அந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தான். விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டனர். பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான்.
இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் நடமாட்டம் உள்ள தெருக்களில் சிறுவர்கள் இதுபோன்று ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவது குறித்துப் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
