இந்தியாவில் யு.பி.ஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மின்சாரக் கட்டணம், காப்பீட்டுத் தவணை மற்றும் கடன் இஎம்ஐ (EMI) போன்றவற்றைத் தானாகவே செலுத்தும் ‘ஆட்டோ பே’ (Auto Pay) வசதியை, இனிப் பயனர்கள் மிகவும் எளிதாகக் கையாள முடியும். பீம் யு.பி.ஐ, கூகுள் பே, போன் பே என எந்தச் செயலியைப் பயன்படுத்தினாலும், அனைத்துத் தானியங்கிப் பரிவர்த்தனைகளையும் ஒரே தளத்தில் நிர்வகிக்கும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது.
இந்தச் சேவையை ஒருங்கிணைக்க upihelp.npci.org.in என்ற பிரத்யேக இணையதளத்தை NPCI உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஆட்டோ பே பதிவுகளைச் சரிபார்க்கவும், தேவைப்பட்டால் அவற்றை ரத்து செய்யவும் முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் இந்தப் புதிய வசதி, வரும் ஜனவரி 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.
