இந்திய ரயில்வே துறை நவீன தொழில்நுட்பங்களைச் சோதிப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பிரிவில் பிரத்யேகமான ‘அதிவிரைவு சோதனைப் பாதையை அமைத்து வருகிறது. குதா மற்றும் தாதானா மித்ரி இடையே சுமார் 64 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தத் தண்டவாளங்கள் உருவாக்கப்படுகின்றன.
சுமார் 967 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் இந்தப் ப்ராஜெக்ட், வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 58 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனைப் பாதையின் முக்கிய நோக்கம், சாதாரண ரயில் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் புதிய ரயில்களின் வேகம், பிரேக் திறன் மற்றும் பாதுகாப்பைச் சரிபார்ப்பது ஆகும். மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகம் வரை ரயில்களை இயக்கிச் சோதிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்களின் அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை விரைவாக அறிமுகப்படுத்த முடியும். இதுமட்டுமன்றி, ராஜஸ்தானின் சுற்றுலாப் பகுதியான உதய்பூரில் கூட்ட நெரிசலைக் குறைக்க ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் பணிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
