தேனி மாவட்டம் பண்ணைபுறம் அருகே உள்ள பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்த தர்மர் என்பவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்த நிலையில் இவருடைய மனைவி சந்திரா வீட்டுக்கு அருகே கூழ் கடை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர்களுடைய மகனான அஜித் (26) பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் சிறுவயதில் இருந்தே கூடி தொழில் செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட தர்மர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபகாலமாகவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மாறிய தர்மர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மகனுடன் தேவையில்லாமல் தகராறு செய்து வந்தார். வழக்கம்போல நேற்றைய தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த தர்மர் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார். மேலும் அம்மாவை போய் இவ்வளவு அசிங்கமா பேசுற என்று மகன் கேட்டதற்கு அவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மரின் மனைவி சந்திரா மற்றும் மகன் அஜித் ஆகியோர் அருகில் இருந்த கட்டைகளை எடுத்து தர்மரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த தர்மர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்மரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் ஆர் சந்திரா மற்றும் அவருடைய மகன் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். குடித்துவிட்டு தகராறு செய்த தந்தையை தாயுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
