காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரத்தில், சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை பாஜகவினரே அடித்து துவம்சம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக (SIR) பூத் ஏஜென்ட்டுகளுக்கு பாஜக மேலிடம் வழங்கிய பணத்தைப் பிரிப்பதில் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வீடு திரும்பியபோது, நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டை முற்றுகையிட்டது. அவர்கள் செல்வமணியைத் தாக்க முயன்றதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர். இந்த வன்முறை தொடர்பாகப் பாஜக நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை மணிமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
