ஒரு வங்கி கணக்கில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் எவ்வித பணப் பரிமாற்றமும் செய்யவில்லை என்றால், அந்த கணக்கு ‘செயலற்ற கணக்காக’ மாற்றப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மோசடிகளைத் தவிர்க்கவும் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுக்கின்றன.
இவ்வாறு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் ஏடிஎம் கார்டு, செக் புக் அல்லது இணைய வழி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், உங்கள் பணம் வங்கியில் பாதுகாப்பாகவே இருக்கும். அதற்கான வட்டியும் தொடர்ந்து கணக்கில் ஏறும். ஆனால், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இழந்த கணக்கை மீட்டெடுக்க, வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று புதிய கேஒய்சி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கணக்கு பயன்பாட்டில் இல்லையெனில், அதிலுள்ள பணம் ‘வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு’ மாற்றப்படும். இத்தகைய சூழலில் பணத்தைத் திரும்பப் பெற கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் என்பதால், அவ்வப்போது சிறு தொகையையாவது கணக்கில் செலுத்தி அதனைச் செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
