வருகிற ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. அடுத்த நாளே 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது. ரெட்ஜெயிண்ட் முவீஸ்தான் பராசக்தி படத்தை வெளியிடுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் விஜய் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைப்பதில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே எங்களுக்கு விஜய் படமே வேண்டாம். பராசக்தி படத்தை வெளியிடுங்கள். அந்த படத்தை திரையிடுகிறோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சிலர், உதயநிதியிடம் பேசிய ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதற்கு காரணம், ஜனநாயகன் படத்தை திரையிடும் தியேட்டர்களில் 80 – 20 என்ற ஷேர் பேசப்பட்டுள்ளது. அதாவது தியேட்டர் டிக்கெட் வசூலில் விநியோகஸ்தர்களுக்கு 80 சதவீத பங்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கு 20 சதவீதம் பங்கும் என்று பேசப்பட்டுள்ளது.
ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் பலத்த நஷ்டத்தில் தியேட்டர்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான படங்கள் ஓடுவதே இல்லை. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் வந்தால்தான் கொஞ்சம் வருமானம் பார்க்கின்றனர். முதல் 60 – 40 என்ற ஷேர் இருந்த நிலையில் பிறகு அது 70- 30 என்று மாறியது. இப்போது 75 – 25 என்றாவது வரும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் 80-20 என்று வினியோகஸ்தர்கள் ஷேர் கேட்டிருக்கின்றனர்.
அதனால் விஜய் படத்துக்கு பதிலாக நாங்கள் பராசக்தி படத்தை திரையிடுகிறோம். 75 – 25 ஷேர் கொடுங்கள் என்று பல தியேட்டர் உரிமையாளர்கள் உதயநிதியிடம் கோரிக்கை வைத்த நிலையில்தான் பராசக்தி படம் ஜனவரி 14க்கு பதிலாக 10ம் தேதியே ரிலீஸ் செய்ய முடிவானது. இதுவும் விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மோத முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
