ராமேஸ்வரம் பகுதியில் நேற்று மாலை கிறிஸ்துமஸ் புத்தாடை எடுக்க வந்த தம்பதியினரை நான்கு பேர் கொண்ட போதை கும்பல் வழிமறித்துத் தாக்கியுள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கணவனை ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, அவரது மனைவியைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர்.
அதற்குள் ஊர் மக்கள் வந்ததால் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், நேற்று ஒருவரைக் கைது செய்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முத்துமணி, மூர்த்தி மற்றும் பார்த்திபன் ஆகிய எஞ்சிய மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ராமேஸ்வரத்தில் தம்பதியினருக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
