தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மல்காஜ் கிரி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது சொந்த மகளையே தாய் மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா மற்றும் டேவிட் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் மனநலப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் ஆத்திரத்தில் இருந்த மோனாலிசா, தனது கோபத்தைக் குழந்தை மீது காட்டியுள்ளார்.
சம்பவத்தன்று ஏழு வயதான சிறுமி ஷெரோன் மேரி தனது தாயின் கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த தாய், சிறுமியைத் திட்டி, “உன்னைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடுகிறேன்” எனக் கூறி மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படிக்கட்டுகளில் விழுந்து பலத்த காயமடைந்த சிறுமியைத் தந்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. இந்தக் கொடூரச் செயல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தாயைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
