ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் நேற்று ஒரு யூத சமூக நிகழ்ச்சி நடைபெற்ற போது, அங்கு இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஒரு தந்தை மற்றும் மகன் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 50 வயதுடைய சஜித் அக்ரம் என்பவர், சம்பவ இடத்திலேயே போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.
அவரது மகன், 24 வயது நவீத் அக்ரம், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலின்போது, துணிச்சலுடன் செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்ற அகமத் அல் அகமத் என்பவரின் வீரம் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சவுத்ர்லேண்டில் பழக்கடை வைத்திருக்கும் 43 வயதான இரு குழந்தைகளின் தந்தையான அகமத், வெறுங்கைகளால் தாக்குதல் நடத்தியவரை எதிர்கொண்டார். அவரது இந்தச் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அகமதுக்கு இரண்டு இடங்களில் குண்டுக் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர் ஒரு உண்மையான ஹீரோ என்றும் அவரது உறவினர் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
