நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று மக்கள் முன்பாக வருகிறார்கள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இதை தொடர்பாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய கே என் நேரு, திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. குடும்பப் பெண்கள் வளர்ச்சிக்காக மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 53,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளோம். இதே போல வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் கூடுதல் வாக்குகளை பெற வேண்டும்.
மேலும் நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகப்போகிறேன் என நாட்டு மக்கள் முன்பாக கூறிக்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்களாகிய நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஆட்சி நாட்டு மக்களாகிய உங்களுக்கு செய்துள்ள நல்ல பல திட்டங்களை எண்ணிப் பார்த்து வருகின்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும். அரசுடைய சாதனைகளை நல்ல பல திட்டங்களை பூத் கமிட்டி நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்க பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே என் நேரு பேசியுள்ளார்.
மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய அமைச்சர் நேருவை குறி வைத்து அடித்தால் திருச்சி பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜகவினர் வேலை செய்கிறார்கள் என கூறியுள்ளார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன் என்றும் கே என் நேரு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் 1020 கோடி ஊழல் செய்ததாக வெளியான செய்தி தமிழக அரசியலில் பெரும் நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
