தேனி மாவட்டம் தேவாரம் அருகே முத்தையன் செட்டி பட்டியைச் சேர்ந்த பிரதீப் (27), சட்டம் படித்தவர். அமமுக கட்சிப் பொறுப்பில் உள்ள அவரது தந்தை சிவக்குமார். பிரதீப்புக்கும் சின்னமனூரைச் சேர்ந்த நிகிலாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரதீப் எந்த வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், அவர் மீது பல வழக்குகள் இருந்தன. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிரதீப்பின் தொல்லை தாங்காமல் நிகிலா ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து கடந்த வாரம் அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர். ஆனாலும், நான்கு நாட்களுக்கு முன் பிரதீப் மீண்டும் நிகிலாவைத் தாக்கியதில், காயமடைந்த நிகிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகப் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இனி பிரதீப்புடன் வாழ முடியாது என முடிவு செய்த நிகிலா, தன் அண்ணன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, பிரதீப் வீட்டில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, வீட்டு வாசலில் காத்திருந்த பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவகுமார், நிகிலாவிடம் வாக்குவாதம் செய்து, நிகிலாவின் அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைக்கண்டு மயங்கிய நிகிலாவையும் அவர்கள் வெட்டியதால், அண்ணன் தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, பிரதீப் மற்றும் சிவகுமார் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரதீப் மற்றும் அவரது தந்தை மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். திருமணமான மூன்று மாதங்களில் நடந்த இந்தக் கொடூர இரட்டைக் கொலைச் சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
