திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அஜய் என்பவர், தன் மனைவி தனத்துடன் திருமழிசை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தார். அங்கு அவருக்கு ஆட்டோ ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்களானார்கள். இதனால் ஹரிகிருஷ்ணன் அடிக்கடி அஜய் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.
அஜய் குற்றவாளி என்பதால், அவ்வப்போது சிறைக்குச் சென்று வருவது வழக்கம். அப்படி அவர் சிறையில் இருந்தபோது, ஹரிகிருஷ்ணன் அஜய் வீட்டிற்குச் சென்று, தனிமையில் இருந்த தனத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தனம், உடனடியாகச் சிறையில் இருந்த தன் கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த அஜய், தனது நண்பர்கள் ஞானம், ரகுராம், சுதன் ஆகியோருடன் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், குடிக்கச் சென்ற இடத்தில் ஹரிகிருஷ்ணன் போதையாக இருந்த நிலையில், அஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், ஹரிகிருஷ்ணனின் சடலத்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியதுடன், அஜய்யின் தந்தையைக் கைது செய்து, அவர் மூலம் அஜய்க்குப் பேசி, செல்போன் சிக்னலை வைத்து அஜய் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
