தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர் சுப்பிரமணியன் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது, தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. படத்தின் வெளியீட்டு தேதியிலிருந்து 100 நாட்களுக்குப் பின்புதான் ஓடிடியில் படம் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். அவர்களுக்கு மட்டுமே இனி ஒத்துழைப்பு தரப்படும். ஜனவரி 1ம் தேதியிலிருந்து பூஜை போடும் படங்களுக்கு இது பொருந்தும்.
இப்போது ஓடிடி தளங்கள்தான் படத்தின் ரிலீஸை முடிவு செய்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக எந்த படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கவில்லை. பெரிய ஹீரோக்கள் நடித்த 5 படங்கள் கூட இன்னும் ஓடிடி வாங்கவில்லை. தீபாவளிக்கு கூட பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. இதற்கு ஓடிடி ஆதிக்கமே காரணம். 28 நாட்களில் ஓடிடி ரிலீஸ் எனும் இப்போதைய நடைமுறையால் நெருக்கடி ஏற்படுகிறது.
திரையரங்கில் உணவு பொருட்கள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தயாரிப்பாளர்கள்தான் ரிலீஸ் தேதியை வரையறை செய்ய வேண்டும். அப்போதுதான் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது என்று பேசியிருக்கின்றனர்.
