உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு அரிதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளை நெகிழ வைத்த சம்பவம் நிகழ்ந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியின் விவாகரத்து வழக்கு, நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் ஆஜரான பெண் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் கணவரிடம் இருந்து ஜீவனாம்சமோ அல்லது பண இழப்பீடோ எதுவுமே கேட்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கினால் போதும் என்றும் தெரிவித்தார். மேலும், காணொலி காட்சி மூலம் ஆஜரான அந்தப் பெண், திருமணத்தின்போது தனது மாமியார் பரிசளித்த தங்க வளையலை அவரிடமே ஒப்படைக்க விரும்புவதாகவும் கூறினார்.
இந்த வளையல் கணவரின் தாய்க்குச் சொந்தமானது என்பதால், அதனைத் திரும்பக் கொடுக்க விரும்புவதாக அவர் விளக்கம் அளித்தார். பொதுவாக விவாகரத்து வழக்குகளில் பெண்கள் ஜீவனாம்சம் அல்லது இழப்பீடு கேட்பது வழக்கம் என்ற நிலையில், இந்த நேர்மையான கோரிக்கையை கேட்ட நீதிபதிகள் நெகிழ்ந்து போயினர்.
“இதுவரை நாங்கள் சந்தித்த அரிய வழக்குகளில் இதுவும் ஒன்று. உங்களின் நல்ல பண்பை நாங்கள் பாராட்டுகிறோம். கடந்த காலத்தை மறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்” என்று அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ், உடனடியாக அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
