தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஆலம்பாடி காவிரி ஆற்றில், கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்து நீலகிரி தோப்பு வனப்பகுதியில் ஒதுங்கியது. தகவலறிந்து வந்த ஒகேனக்கல் போலீசார் சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த, தேங்காய் வியாபாரம் செய்து வந்த 35 வயது ருத்ராட்ச ராவ் என்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ருத்ராட்ச ராவ் ஒரு பெண்ணை கேலி செய்ததாலும், கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாகவும் இந்தப் படுகொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள், ருத்ராட்ச ராவை மது அருந்த அழைத்துச் சென்று, போதை ஏறியதும் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்து, கைகளைக் கட்டி காவிரி ஆற்றில் வீசிச் சென்றிருக்கின்றனர்.
இதுதொடர்பாக, கேரட்டியைச் சேர்ந்த முருகேசன் (49), ஒகேனக்கல் இந்திராநகரைச் சேர்ந்த நாகராஜ் (45), மற்றும் சாணார் கொட்டாயைச் சேர்ந்த மூர்த்தி (35) ஆகிய மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். கடந்த 5ஆம் தேதி ஒகேனக்கல் வரவழைக்கப்பட்ட ருத்ராட்ச ராவை, நீலகிரி தோப்பில் மது அருந்தும்போது, இந்த மூவரும் சேர்ந்து கழுத்தை அறுத்ததோடு வயிற்றையும் கிழித்துக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
