நீதிமன்ற வழக்கும் விசாரணையும் நிலுவையில் இருக்கும் நிலையில் அதிமுக பொது குழு தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார். அண்ணா திமுக மூத்த தலைவரும் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பொது குழு சட்டத்திற்கு புறம்பானது. அதன் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இரட்டை இலை சின்னம் வழங்கியதும் தவறு என தொடுத்த வழக்கு நிலுவையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உயர்நீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அதிமுக வழக்கு சம்பந்தமாக நிலுவையில் உள்ள மனுக்கள் வழக்குகளை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது என்று உத்தரவிட்டு விசாரணையும் தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நிலுவையில் உள்ள சிவில் வழக்கு முடிவுதான் இறுதியானது. இது போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் தன்னைத்தானே பொதுச்செயலாளர் என சொல்லிக்கொண்டு ஊடகங்களை பழனிச்சாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
அதன் முடிவுகளை தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்கனவே தேர்தல் ஆணையம் புறக்கணித்துவிட்டது. இந்த முறை அதேபோல நடந்து விடக்கூடாது. எனவே இரட்டை இலை சின்னத்தை விசாரணை முடியும் வரை ஒதுக்க கூடாது. எடப்பாடி பழனிச்சாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறிக் கொள்வது தவறானது. அதன் மீது நம்பிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திரும்பத் திரும்ப மனு கொடுத்துள்ளோம் என்று புகழேந்தி கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
