கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்த அக்ஷய் (23) என்ற ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் கவரலூர் பள்ளி வடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி – நீலம்மாள் தம்பதியின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி (16) மற்றும் ஜோதிலட்சுமி (21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கவரலூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பேருந்து வந்தது. அந்தப் பேருந்தும் ஆட்டோவும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கிய நிலையில் ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி சுருதி லட்சுமி , ஜோதிலட்சுமி ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கிடந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
