மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா எம்எல்ஏ சரத் சோனாவனே சிறுத்தை வேடமணிந்து வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகபுரி நகரின் பர்டி பகுதியில் நேற்று சிறுத்தை தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தை தாக்குதலால் மாநிலம் முழுவதும் மக்கள் கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு செயலாக ஜூன்னார் தொகுதி எம்எல்ஏ சரத் சோனாவனே சிறுத்தை வேடமடைந்து சட்டசபைக்கு வந்தார். பூனேமாவட்டத்தில் உள்ள ஜூன்னார் தாலுகாவில் மட்டும் சிறுத்தை தாக்குதலால் கடந்த 3 மாதங்களில் 55 பேர் பலியாகி உள்ளனர். அந்தப் பகுதி மக்கள் பலத்த பீதியில் உள்ளனர். எனவே இப்படி வேடமணிந்து வந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
