கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அத்தாணி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டில் பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்தது. இது மலையாள சினிமா துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி மலையாள நடிகர் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இருந்த முன்விரோதம் காரணமாகவே சதிதிட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரிய வந்தது.
இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர் என்று நடிகர் திலீப் ஏற்கனவே கூறியிருக்கிறார். இந்நிலையில் நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுக்கிய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது கேரளா சினிமாத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
