திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்மழை மற்றும் கடுமையான குளிர் காரணமாக பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால் திருப்பதியில் கூட்டம் குறைந்துவிட்டது. கடந்த டிசம்பர் 1ம் தேதி 70,345 பேர், டிசம்பர் 2ம் தேதி 64,684 பேர், 3ம் தேதி 63,887 பேர், 4ம் தேதி 51,082 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.
வழக்கமாக திருப்பதியில் வார நாட்களில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கடும் குளிர் மற்றும் மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்து விட்டது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. திருமலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பல்வேறு முக்கிய விழாக்களின் போது விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
வருகிற டிசம்பர் 23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், டிசம்பர் 29ம் தேதி வைகுண்ட துவார தரிசனத்திற்கு முந்தைய தினம், 30ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம், ஜனவரி 25ம் தேதி ரத சப்தமி ஆகிய நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் அனுமதிக்கப்படாது. அந்த நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
