தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் அரவிந்த் சாமி. ரோஜா படம் முதல் மெய்யழகன் படம் வரை ஒரு சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தியவர். பிரபல சீரியல் நடிகர்தான் அவரது அப்பா என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலை பார்த்த யாராலும் அந்த 5 பெண்களின் தந்தையாக, வீட்டுமனை புரோக்கர் கேரக்டரில் நடித்த டெல்லி குமாரை மறக்கவே முடியாது. அவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
அவர்தான் நடிகர் அரவிந்த் சாமியின் தந்தை என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் டெல்லி குமார் கூறுகையில், நடிகர் அரவிந்த்சாமி என் பையன்தான். ஆனால் பிறந்த உடனே என் மனைவியின் தங்கைக்கு அரவிந்த் சாமியை சுவீகாரம் அதாவது தத்து கொடுத்து விட்டோம். அதனால் நாங்கள் அவரை எங்கள் மகன் என்று அதிகமாக உரிமை கொண்டாடுவதில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை தந்துள்ளது.
