திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த சுதர்சன்(22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுதர்சன், சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்து, இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் தேடி சென்று மகளை மீட்டு கொடைக்கானல் அழைத்து வந்தனர். பின்னர், சுதர்சன் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த சுதர்சன், திருப்பூரில் வேலை பார்த்து வந்த சிறுமியை சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். சிறுமி மறுத்ததால் ஆத்திரமடைந்த சுதர்சன், அவரை கத்தியால் குத்தியும், தலையைச் சுவரில் முட்ட வைத்தும் துன்புறுத்தியுள்ளார்.
சுதர்சன் நேற்று சிறுமியின் வீட்டிற்கு வந்து, “தன்னுடன் வரவில்லையென்றால் உன்னையும் உன் தாயையும் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் குறித்துச் சிறுமி அளித்த புகாரின் பேரில், கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசார் சுதர்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
