தமிழ் மொழி, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்த தமிழறிஞர் சிவா பிள்ளை உடல்நலக்குறைவால் காலமானார். 90களின் இறுதியில், இலங்கையின் வட, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் கணினி வசதிகளும், மின்சார வசதிகளும் குறைவாக இருந்த காலத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, வழிகாட்டியாக இருந்தார்.
விடுமுறைகளைக் கூட தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அல்லாமல் தொலைதூர கிராமங்களுக்கு சென்று, கணினி விழிப்புணர்வு, தமிழ் கணினியியல், தமிழ் தட்டச்சு மற்றும் மென்பொருள் பயன்பாடு போன்றவற்றை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கொண்டு செல்ல அவர் அர்ப்பணித்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
