கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் அதிகாலை நேரத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் மாலூர் தாலுகா அருகே உள்ள கிராமத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. காரில் பயணித்த நண்பர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிவேகமாக கார் ஓட்டி சென்றதை விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
அதிவேகமாக வந்த கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில் மோதியதில் கார் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் பாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இருந்த நான்கு ஐயப்ப பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த வாரம் திருப்பூரில் பெங்களூரில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பேருந்து விபத்தில் 37 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
