மலேசிய அரசு, அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் தளங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில், விதிகளை இறுக்கும் அல்லது தடை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியா இணைய உள்ளது.
மலேசியத் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இது குறித்துத் தெரிவிக்கையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் Facebook, Instagram மற்றும் Snapchat போன்ற தளங்களில் சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதையும் பராமரிப்பதையும் சட்டவிரோதமாக்கும் ஒரு சட்டத்தை அரசு உருவாக்கி வருவதாகக் கூறினார்.
ஆஸ்திரேலியா அரசாங்கமும் டிசம்பர் 2025 முதல் இளம் வயதினருக்குச் சமூக ஊடகத் தடையை அமல்படுத்தவுள்ளது. மலேசியாவில் 2026-ல் இந்தத் தடை அமலாகும் முன், அதன் கட்டமைப்பை இறுதி செய்யத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுடன் இணைந்து அரசு பணியாற்றி வருகிறது.
