மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், பதினெட்டாம் படிக்கு அருகே அசாதாரணமான சூழல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
சிறுவர்களுடன் வந்திருந்த பக்தர்கள் அதிகக் கூட்டம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகக் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில், நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலவில் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தலைவர் கே. ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தப் பதினெட்டாம் படிப் பகுதியில் கூடுதலாக 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கர்நாடகாவில் இருந்து 33 பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து கோட்டயம் மாவட்டம் எருமேலியில் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர்.
