கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் சட்டம்-ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், நள்ளிரவில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்ற போது, 19 வயது இளம் பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. செல்போனில் அதிக நேரம் பேசியதற்காகப் பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டு கோவைக்கு வந்ததாகவும், கையில் பணம் இல்லாததால் எங்குச் செல்வது என்று தெரியாமல் தவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், அந்த மாணவியைக் கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாகத் தங்க வைத்தனர். இதுகுறித்த தகவலறிந்த மாணவியின் பெற்றோர் விரைந்து வந்தவுடன், போலீசார் மாணவியை அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், வீட்டைவிட்டு வெளியேறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.
