நமது முன்னோர்கள் திணை, கம்பு போன்ற குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளை உண்டு, வாழ்வதற்காக உழைத்துச் சாப்பிட்டனர். ஆனால், இன்று நாம், தினசரி அதிக அரிசி உணவுகளையும், ரீஃபைண்டு சர்க்கரை மற்றும் எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளையும், பீட்சா, பர்கர் போன்றவற்றை பசியில்லாமல் 3 முதல் 5 வேளை உண்கிறோம். உணவில் உள்ள இந்த அதிக மாவுச்சத்தே நாம் குண்டாவதற்குக் காரணம்.
மாவுச்சத்தை அதிகம் உட்கொள்ளும்போது, ‘இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரந்து, கொழுப்புச் சத்தை (ட்ரை கிளிசரைடுகள்) உடலிலே சேமிக்கிறது. இந்தச் சேமிப்பு தொடர்வதே தொப்பை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. ரீஃபைண்டு சர்க்கரை இந்த இன்சுலின் சுரக்கும் செல்களை விரைவாக அழித்து, ‘இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ என்ற நீரிழிவு நோயை உண்டாக்குகிறது.
பசியைக் கட்டுப்படுத்தும் மற்ற ஹார்மோன்களான ‘க்ரெலின்’ (பசியைத் தூண்டுவது) மற்றும் ‘லெப்டின்’ (திருப்தியை அளிப்பது) ஆகியவற்றின் சமநிலையும் குலைகிறது. உடல் பருமன் கொண்டவர்களின் கொழுப்பு, லெப்டின் மூளைக்குச் சென்று திருப்தி உணர்வைத் தருவதைத் தடுத்து, ‘லெப்டின் ரெசிஸ்டன்ஸ்’ என்ற நிலையை உருவாக்குகிறது.
இதனால், பசியைத் தூண்டும் க்ரெலின் மட்டும் தொடர்ந்து வேலை செய்வதால் நாம் பசியில்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். உடல் எடையைக் குறைக்கவும் தொப்பையைக் கரைக்கவும், நாம் மாவுச்சத்தை உணவில் குறைத்து, தேவையான புரதத்துடன் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை அதிகமாகச் சேர்க்க வேண்டும். கொழுப்பால் மட்டுமே கொழுப்பைக் கரைக்க முடியும் என்பதே உண்மை.
