சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (50), கடந்த முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது மகன் கார்த்திக்கைத் தாக்க வந்தது. சரித்திரப் பதிவேடு ரவுடியான கார்த்திக், வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வெளியே இருந்த அவரது தந்தை சீனிவாசனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.
கைகால்களில் பலத்த வெட்டுக் காயமடைந்த சீனிவாசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில், சீனிவாசனின் மகன் கார்த்திக்குடன் நட்பு பாராட்டி வந்த பிரசாந்த் (21) என்பவர்தான் இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் என்று தெரியவந்தது. பிரசாந்த் சிறையில் இருந்தபோது, அவரது திருநங்கை மனைவி கீதாவிடம் கார்த்திக் தவறாக நடக்க முயன்றதே இவர்களுக்குள் பகையாக மாறியுள்ளது.
குண்டர் சட்டத்தில் சிறை சென்ற பிரசாந்த், ஜாமீனில் வெளியே வந்து, கார்த்திக்கைப் பழிவாங்க முயன்றபோதுதான் இந்தக் கூலிப்படையின் தாக்குதலில் தந்தை சிக்கினார். இதையடுத்து, பிரசாந்த், புவன் (19), திருநங்கை கீதா (26) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பிரசாந்த் மற்றும் புவன் தப்பியோட முயன்றபோது கை உடைந்ததால், அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
