தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் கூட்டணிகளும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்தக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களும் மாற்றுக் கட்சியில் இணைவது வழக்கம்தான். அதிலும் இந்த முறை அதிமுகவிலிருந்து பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில் பலரும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜா போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை வைத்தியலிங்கம் முழுமையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், என்னை பற்றி பரவும் தகவல் அனைத்தும் பொய். எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் எனது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது, அதிமுகவுடன் நான் இணைய போகிறேன் என்று பரவும் தகவல் அனைத்தும் வதந்தி எனக் கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவில் அதிமுகவை சேர்ந்த பலர் இணைந்த நிலையில் வைத்தியலிங்கத்தை சேர்த்து விட்டால் திமுகவின் பலம் பெருகும் என்று ஸ்டாலின் திட்டமிட்ட நிலையில் இவருடைய இந்த கருத்து ஸ்டாலினை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உடன் மீதம் இருக்கும் ஒருவரையும் தன் பக்கம் சேர்த்து விட்டால் ஓபிஎஸ் தனிமரம் ஆகிவிடுவார் என்று இபிஎஸ் திட்டம் தீட்டிய நிலையில் இந்த அசைவும் தற்போது நிறைவேறாமல் போய்விட்டது.
