நடிகர் சூர்யா திரையுலகில் காலடி எடுத்து வைத்ததற்கு இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த் மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது என்று இயக்குநர் மணிபாரதி தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சூர்யாவை நடிகராக முதன்முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எங்களிடம் பரிந்துரைத்தவர் சுஹாசினிதான். அவர், “நடிகர் சிவகுமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்; அதில் மூத்த மகன் பார்க்க நன்றாக இருக்கிறார்.
அவரை உங்கள் படத்தில் நடிக்க கேட்டு பாருங்கள்” என்று ஆலோசனை வழங்கினார். அதையடுத்து நானும் இயக்குநர் வசந்தும் சென்று சிவகுமார் அவர்களைச் சந்தித்தோம். எங்கள் கோரிக்கையைக் கேட்ட சிவகுமார் அவர்கள் முதலில் சம்மதிக்கத் தயங்கினார். “சூர்யா இப்போது ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். மேலும், சொந்தமாக ஆடைத் தொழிற்சாலை தொடங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவனை சினிமாவில் இழுத்து விட வேண்டாம்” என்று எங்களிடம் தன் தயக்கத்தை வெளிப்படுத்தினார். பிறகு நாங்கள் மணிரத்னம் அவர்களிடம் இந்த விஷயத்தைக் கூறினோம். உடனடியாக அவரே நேரில் சென்று சிவகுமார் அவர்களைச் சந்தித்து, சூர்யா நடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மணிரத்னத்தின் தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னரே, சிவகுமார் இறுதியாக சம்மதம் தெரிவிக்க, சூர்யாவும் சினிமாவிற்கு வந்தார் என்று மணிபாரதி நினைவுகூர்ந்தார்.
