தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் உலகத் தரம் வாய்ந்த உணவகங்கள் வரை, புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் தங்கள் திறமையை சர்வதேச அளவில் விரிவுபடுத்தியுள்ளனர். இந்திய மொழிகளில் சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், பல தொலைக்காட்சிகளிலும் அதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் நம்பர் 1 பணக்கார சமையல் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் சஞ்சீவ் கபூர். சஞ்சீவ் கபூர் 1990களில் ‘கானா கஜானா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி ஆசியாவிலேயே 17 ஆண்டுகள் என நீண்ட காலம் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்தது.
அவர் உணவகங்கள் (‘ஹெல்லோ சில்லி’ என்ற பெயரில்), 150க்கும் மேற்பட்ட சமையல் புத்தகங்கள், சமையலறை உபகரணங்கள் எனத் தனது வணிகத்தை பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். இவரது மொத்த நிகரச் சொத்து மதிப்பு சுமார் ரூ. 1165 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சீவ் கபூரைத் தொடர்ந்து, அமிர்தசரஸ் முதல் நியூயார்க் வரை பயணித்து பல சர்வதேச விருதுகளை வென்ற சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது நிகரச் சொத்து மதிப்பு சுமார் ரூ. 84 கோடி முதல் ரூ. 127 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மிச்செலின் நட்சத்திர விருதை (Michelin Star) வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரிய கரிமா அரோராவின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடியாக உள்ளது. மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ரன்வீர் பிரார், மாத வருமானமாக ரூ. 45 லட்சம் ஈட்டி, ரூ. 41 கோடி சொத்து மதிப்பை வைத்துள்ளார்.
அதே மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றும் குனால் கபூர், சமையல் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் உணவகங்கள் மூலம் ரூ. 8.71 கோடி ரூபாய் சொத்துகளைச் சேர்த்துள்ளார். இறுதியாக, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் திருமணங்களில் சிறப்புச் சமையல்கள் மூலம் பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜ், 2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, தோராயமாக ரூ. 33 கோடி நிகரச் சொத்து மதிப்பை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
