தமிழகத்தை பொறுத்தவரையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளில் சிலர் இந்த தேர்வை எழுதாமல் இருப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் பொதுத் தேர்வை 8.51 லட்சம் மாணவ மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதாதது கல்வி துறையை அதிர்ச்சி அடைய செய்தது. இதே நிலைதான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நீடித்து வருவதால் இதனை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி இனி வரும் காலங்களில் 75 சதவீதம் வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் எந்தவித தன்னிச்சையான அனுமதியின் பேரிலும் தேர்வு எழுத முடியாது. இது மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கு வருவதன் அவசியத்தை உணர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் வருகை பதிவை கண்காணித்து அதன் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான அனுமதி வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மாநிலத்தின் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
