கோவை இருகூர் பகுதியில் நேற்று இரவு காரில் பெண் கடத்தப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு பின்பகுதியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் அடங்காத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை பெண் கடத்தப்பட்டதாக எந்த ஒரு புகார் வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதே சமயம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை செய்த ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் பேசிய பெண், நான் அருகில் உள்ள எலக்ட்ரானிக் கம்பெனியில் வேலை செய்கின்றேன்.
அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வந்த போது அந்த பகுதியில் ஒரு வெள்ளை நிற கார் நின்று கொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் ஒருவர் இருக்கையில் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் பிங்க் கலர் சுடிதார் போட்டு வெள்ளை நிற துப்பட்டா அணிந்த ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார். எப்போதும் அந்த இடத்தில் இருட்டாகத்தான் இருக்கும் அன்றும் அதே போல தான் இருந்தது. பெண் ஒருவர் கத்தும் சத்தம் கேட்டது, சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது அந்த ஆண் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தார். காரின் பின்பக்க கதவு திறந்திருந்தது. பின்பக்க இருக்கையில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதை நான் அந்த கார் செல்லும்போதுதான் பார்த்தேன். அங்கு வந்த நபர்களிடம் அந்த பெண் குறித்து சொல்லி உதவி கேட்க வாகனங்களை நிறுத்த சொன்னேன்.
ஆனால் ஒருவர் கூட வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டார்கள். பிறகு ஒரே ஒரு பெண் மட்டும் வாகனத்தை நிறுத்திய நிலையில் அவரும் நடந்ததை கேட்டுவிட்டு என்னை திட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண் எவ்வாறு அலறினார் என காவல்துறை கேட்டபோது அவர், ஐயோ அம்மா வலிக்கிறது என்று கத்தியதாகவும் காப்பாற்றுங்கள் என்று கட்டவில்லை என்றும், உள்ளே ஏதோ சண்டை நடப்பது போல தான் கத்தியதாக கூறினார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது அந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
