அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றைய செய்தியாளர்களை சந்தித்தபோது கொடநாடு விவகாரம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தினகரனின் கருத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உனக்கு என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று கிராமங்களில் பேசுவார்கள். அதுபோல தான் டிடிவி தினகரனின் பேச்சு இருக்கின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவிலிருந்து அவரை 10 ஆண்டுகள் நீக்கி வைத்திருந்ததால் அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது.
கொடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது சட்டசபையில் விவாதம் நடைபெற்று அவை அனைத்தும் சட்டமன்ற அவை குறிப்பில் உள்ளது. உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டுகளை படித்து கிழித்து விட்டதாக உத்தமபுத்திரன் போல தினகரன் பேசுகிறார். தினகரன் தனிக்கட்சி தொடங்கிய போது எத்தனை பேர் இருந்தார்கள். கட்சி தொடங்கி 18 பேரை தெருவில் நிறுத்தி இருக்கிறீர்கள். தற்போது உங்களிடமிருந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டே இருக்கிறார்களே அது ஏன் என்று ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
