தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வடசென்னை மாவட்ட செயலாளர் பி.எஸ் சிவா இபிஎஸ் முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். அதேபோல ஓபிஎஸ் அணியின் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சாய் அருணேஷ், ஆர் கே நகர் பகுதி செயலாளர் விஜயகுமார், வடசென்னை மாவட்ட பேரவை செயலாளர் முருகன் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுக வலுவாக உள்ள வடசென்னை அதிமுக கைப்பற்ற தீவிரமாக பணியாற்றி வருகிறது.
