தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இதுபோன்ற ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும் என்று கேடு விதித்தது.
இந்நிலையில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூரில் நடந்தது போன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் அது இந்தியாவுக்கே வழிகாட்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சிகளின் ரோடு சோக்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
