தூத்துக்குடி தாளமுத்து நகரில் இருந்து வெள்ளப்பட்டி செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் சூர்யா என்ற இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்து நகர் போலீசார் இளைஞரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். தாளமுத்து நகர் அருகே உள்ள துரைசிங் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு சூர்யா (21) என்ற மகன் உள்ளார. இவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றார்.
இதனிடையே சூர்யா கஞ்சா போதைக்கு அடிமையாகி சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சூர்யா தாளமுத்து நகர் பகுதியில் இருந்து வெள்ளப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை வழியாக நண்பர்கள் மூன்று பேருடன் மது அருந்துவதற்காக அந்தோணியார் கோவில் பின்புறம் உள்ள முட்புதர் நிறைந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறியில் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து சூர்யாவை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைக்கு அடிமையான இளைஞர் நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
