தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். 2021 தேர்தல் வெற்றிக்கு பிறகு திமுகவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடிக்கும். இதனால் திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தனித்துப் போட்டி என்று தற்போது அவர் கூறியுள்ளது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
