ஜாதி பெயரை நீக்குகிறோம் என்று சொல்லி கருணாநிதியின் பெயரை திணிக்கப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளாட்சிப் பகுதிகளில் ஜாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டு மாற்று பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளை வழங்கி உள்ளார்கள். அதில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்ற தலைவர்களுடைய பெயர்களை புறக்கணித்திருக்கிறார்கள். அவர்களை பட்டியல் சமூக தலைவர்களாக மட்டுமே திமுக பார்க்கிறது. அந்த பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் உள்ளது.
தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத்தானே டாக்டர் பட்டம் கொடுப்பது என்று கருணாநிதி செய்த நகைச்சுவைகள் ஏராளம். இப்போது பொது இடங்களுக்கு அவருடைய பெயர் வைத்து கருணாநிதியை மிஞ்சி கொண்டிருக்கிறார் அவருடைய மகன் ஸ்டாலின். குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயர் வைக்காத நீங்கள் பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள். ஜாதி பெயரை நீக்குகிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் ஊழல் படுகுழியில் தள்ளி கருணாநிதி பெயரை வைக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
