கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரக்குளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73) என்பவருடைய மனைவி ஜெயந்தி (63) கடந்த 9 நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தனியார் மருத்துவமனையில் ஜெயந்தி சிகிச்சை பெற்று வந்தார். அவரை கணவர் தான் உடனிருந்து கவனித்தார். உடல்நிலை சரியில்லாமல் மனைவி அவதிப்படுவதை பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்த பாசுரன் ஆசாரி, நேற்று அதிகாலை 3 மணிக்கு அதே மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவ ஊழியர்கள் மீட்டு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயந்தியும் மின் வயரால் கழுத்து இருக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.. இதனைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தியதில், உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட மனைவியை பாசுரன் ஆசாரி கொன்றுவிட்டு மாடியில் இருந்து அவரும் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
