கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரளூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (55) என்பவர் அந்த ஊரின் முன்னாள் ஊர் தலைவராக இருந்தவர். இவருடைய மகன் நவீன் குமார் படித்து முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் உறவினர்களான சிலரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறிய நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை குறித்த எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நவீன் இது குறித்து கேட்கும் போது சரியாக பதில் சொல்லாமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் நவீன், ஒன்னு வேலைக்கு சொல்லுங்க இல்ல நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் நவீன் அவருடைய உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற நபி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உடனே தந்தை ராஜ்குமார் மகனை தேடி செல்லும்போது அங்கே இருந்த உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தந்தை ராஜ்குமாரை அடித்து கீழே தள்ளியபோது கால்வாயில் விழுந்து ராஜ்குமாருக்கு படுகாயம் அடைந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜ்குமாரை கொலை செய்த கங்காதரன், சுகுமாரன், பிரபாகரன், தேவேந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனை தேடி சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
