மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையின் ஆனந்த தருணத்தில் சாதாரண கூலி தொழிலாளி வாழ்க்கை ஒரே இரவில் மாறிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் பண்ணா மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் சிங் ஆதிவாசி, கோரா மாதா துர்கா கோவில் பூஜையை முடித்து வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் சாலையோரத்தில் பளபளப்பாக இருந்த ஒரு பொருளை அவர் கண்டார். உடனே அதை எடுத்துப் பார்த்தபோது அது 4.04 கேரட் தரமான வைரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதன் இன்றைய மதிப்பு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கோவிந்த் சிங்குக்கு நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். வைரத்தை அரசு அலுவலகத்தில் ஒப்படைத்த கோவிந்த் ஏலத்தில் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி வீடு கட்டி, டிராக்டர் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முன்பாக கோவிந்த் 2.50 கேரட் வைரத்தையும் ஒருமுறை கண்டெடுத்துள்ளார். ஆனால் அந்த வைரத்தின் மதிப்பு இவ்வளவு அதிகம் கிடையாது. இந்த முறை அவருக்கு கிடைத்த வைரம் அவரின் குடும்ப வாழ்க்கையை முற்றிலும் மாற்றி உள்ளது. இப்படி ஒரு அதிசயத்தை துர்கா அம்மனின் அருளாகவே கருதும் கோவிந்த் தனது குடும்பத்துடன் புதிய வாழ்க்கை பாதையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றார். இந்த சம்பவம் அதிர்ஷ்டம் எப்போது, எங்கு யாருக்கு வரும் என தெரியாது என்ற உண்மையை உணர்த்துகிறது.
