கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே முதல் கட்டமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கட்சியின் பொதுச் செயலாளர் N. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தன்னுடைய X தள பக்கத்தில், வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டு பிறகு அதனை நீக்கினார். இது தொடர்பாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கரூர் துயர வழக்கில் தலைமறைவாக உள்ளார் N. ஆனந்த். இந்நிலையில் சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவர் இல்லாமல் நடைபெற்று உள்ளது. அத்துடன் விஜயின் சுற்றுப்பயண ரத்து அறிவிப்பும் ஆனந்த் கையெழுத்து விட்டால் லெட்டர் பேட் இல்லாமல், ட்வீட்டாகவே வெளியானது. ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம், CTR நிர்மல் குமாரும் தலைமறைவு ஆகியவற்றால் உயர்மட்ட நிர்வாகிகள் இல்லாமல் தமிழக வெற்றி கழகம் தற்போது இயங்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
