சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கணவரால் கைவிடப்பட்ட பெண் தனது 13 மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்க்கும் மகள்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரண்டு சிறுமிகளும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளுக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ், காரனைபுதுச்சேரியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ் ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் சிறுமிகளுடன் ஆசையாக பேசி காயாறு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமிகளை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கும் அழைத்துச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் ஒரு சிறுமி மட்டும் கர்ப்பமானார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
