சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திவாகர்(43) சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகன் உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திவாகர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சார்பாக பணியாளர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்டோரை தனியார் நிறுவனத்தினர் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். கடந்த 20ஆம் தேதி அந்த நிறுவன அதிகாரிகள் திவாகரின் வீட்டிற்கு வந்தனர். தாய்லாந்துருக்கு சுற்றுலா சென்றபோது ஆழ்கடலில் வண்ண மீன்கள் மற்றும் கடற்பாறைகளை பார்க்க திவாகர் சென்றார்.
அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடல் படையினர் அவரை வெளியே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திவாகர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திவாகரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களை சமாதானம் செய்த தனியார் நிறுவன அதிகாரிகள் திவாகரின் உடலை தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
